சிவனை உறவினராய் நினைப்பவர்!

தாழ்சடை யான்தன் தமராய் உலகினில்
போர் புகழால் எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலு மாமே. –  (திருமந்திரம் – 546)

விளக்கம்:
நீண்ட சடை கொண்ட சிவபெருமானை தம் உறவினனாய் பாவித்து வாழும் பெரியவர்கள் நிறைந்த புகழைப் பெறுவார்கள். அவர்கள் இறுதியில் தாம் விரும்பிய சிவனடியை அடைவார்கள். நாம் அந்தப் பெரியவர்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி நம் உள்ளம் தெளியப் பெற வேண்டும். தெளிவடையும் உள்ளத்தை சிவபெருமான் வந்தடைவான். அதனால் நாம் பெரியவர்களின் துணையைப் பெற்று அவர்கள் காட்டும் நன்னெறியில் நடப்போம்.

போர் புகழால் – போர்த்த புகழால்

நன்னெறி தான் அருள் தரும்!

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. –  (திருமந்திரம் – 545)

விளக்கம்:
விஷயம் தெரிந்தவர்கள் தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானை நாடிச் சென்று அவனுடன் நெருக்கமாக இருப்பார்கள். நன்னெறி தான் அருள் பெறுவதற்கு சிறந்த வழியாகும். அப்படி நன்னெறியில் நின்று சிவபெருமானை நாடி நிற்பவர்கள் பரமான்மா பற்றிய உண்மையை உணர்வார்கள். அப்படிப்பட்ட பெரியவர்களை நாம் தேடிச்சென்று அவர்கள் காட்டும் வழியில் நடப்போம். அதுவே பேரின்பமாகும்.

error: Content is protected !!