ஊழிக்காலம்

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. – (திருமந்திரம் – 65)

ஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாம் நின்று எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் நீர் ஓடாமல் நின்று விட்டது. அந்த ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  அருளினான்.

நந்தியம் பெருமான் சொன்ன ஒன்பது ஆகமங்கள்

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. – (திருமந்திரம் – 63)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவைகாக நந்தியம் பெருமானால் உரைக்கப்பட்டவை. அவை 1. காரணம்,  2. காமிகம்,  3. வீரம்,  4. சிந்தியம்,  5. வாதுளம்,  6. யாமளம்,  7. காலோத்தரம்,  8. சுப்பிரம்,  9 மகுடம்.

ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும், உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியோர் பெற்றார்கள். இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.

ஆகமங்களில் அறிவாய் விளங்குபவன்

பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. – (திருமந்திரம் – 61)

சிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளை காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை போதிக்கிறான். தேவர்கள் வணங்கி வழிபடும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான்.

அனுபவம் அவசியம்!

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. – (திருமந்திரம் – 60)

சிவபெருமான் அருளிய தெய்விக ஆகமங்கள் விண்ணில் வாழும் தேவர்களும் புரிந்து கொள்ள அரிதான பொருள்கள் உடையவை. அவற்றை எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் வரும். அப்பொருள்களை அறிந்து கொண்டாலும் அவை அனுபவத்தில் வரா விட்டால், அவையெல்லாம் நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் பயன்படாமல் போகும்.

தியானத்தால் பிறவிப் பெருங்கடல் நீந்தலாம்

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. – (திருமந்திரம் – 49)

விளக்கம்:
நம்முடைய ஆன்மா மற்றும் ஆன்மாவை கட்டியிருக்கும் தளை ஆகியவற்றின் தலைவனான சிவபெருமானை நினைத்திருப்போம். மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவை ஒருங்கே இருக்கச் செய்ய வல்லவர் அலைகள் நிறைந்த பாவக்கடலை நீந்தி முக்தி எனும் கரையை அடையலாம்.

மனம், உடல், ஆன்மா ஆகியவை ஒருங்கிணைந்து இருக்கும் நிலை தியானமாகும். தியானப் பயிற்சியினால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம்.

(நரை – பழமை,  பசு – ஆன்மா, பாசம் – தளை, உள்ளி – நினைத்து,  திரை – அலை)

Let us think of our Lord, who is the master of this body and soul.
Those who can make their mind, body and soul be concentrated together,
are able to swim this ocean of sin
and reach the shore of Mukthi.

பிராணாயாமம் – கும்பகத்தின் சிறப்பு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.   – (திருமந்திரம் – 571)

விளக்கம்:
இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம்.

இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.

(கால்  – காற்று,  கூற்று – யமன்,    குறி – குறிக்கோள்)

let us inhale through our left and right nostrils alternatively,
and feel elated. We don't know how to retain the breath in between.
If we know the method of retaining the breath inside,
We are destined to spurn the God of Death, Yama.

உதயசூரியன் அவன்!

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.   – (திருமந்திரம் – 116)

விளக்கம்:
மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை ஒரு தாயைப் போல போக்கி அருளும் அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான்.

(வேய் – மூங்கில்,   தயா – அருள்,   தோயமதாய் – கடலிடமாய்)

Like the fire indwells inside bamboo,
Our Lord Nandi resides inside our body - temple.
Like a mother, He remove our three impurities and
arise in our heart like the sun from the ocean.

விளக்கேற்றுவோம்!

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.  – (திருமந்திரம் – 1818)

விளக்கம்:
விளக்கு ஏற்றி எல்லையற்ற பரம்பொருளை அறிவோம். விளக்கின் ஒளியின் முன் நம் வேதனைகள் அகலும். விளக்கு ஏற்றத் தூண்டும் ஞானமாகிய விளக்கு உடையவர்களுக்கு, ஏற்றப்படும் விளக்கினில் சிவன் ஒளியாய் காட்சி தருவான்.

Let we light the lamp and realize the eternal God.
Before the lamp light, our troubles will go away.
For those who have the light of knowledge,
in their lamp light, the Divine Light will show Himself.

தற்பெருமை ஒழி நெஞ்சே!

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே.  – (திருமந்திரம் – 2513)

விளக்கம்:
கரிய கால்களைக் கொண்ட கருடன் வான் வழியே கடந்து செல்வதை பார்த்து, பசுமையான செடிகள் நிறைந்த குளத்தினில் உள்ள கருநாகப் பாம்பு ஓடி ஒளிந்து கொள்ளும். அது போல, ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது கண்டு நாம் நம்முடைய தற்பெருமையை பேசாதிருப்போம்.

ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது போல், நாம் விதி முடிந்து இறைவனுடன் கலந்து விடும் போது, வாழ்நாளில் நாம் தேடிய பெருமைகளெல்லாம் பொருள் இல்லாமல் போய் விடும். இதை உணர்ந்து நாம் பெருமை பேசுவதை விட்டு அடக்கமாய் இருப்போம்.

(கருந்தாள் கருடன் – கரிய கால்களை உடைய கருடன்,   விசும்பு – ஆகாயம்,  இற – கடந்து செல்ல,  கருந்தாள் கயம் – பசுமையான செடிகள் உள்ள நீர்நிலை)

When the black footed bird, Garuda, fly over the sky,
black snake in the pond below will hide itself.
Like this, seeing that the river water cannot be consumed
once it merge with ocean, we should stop speaking our self pride.
error: Content is protected !!