பிரமனுக்குக் கிடைத்தப் பாடம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே. – (திருமந்திரம் – 366)

விளக்கம்:
நல்ல பண்புகளெல்லாம் அழியப் பெற்றவர்கள் தாம் சிவபெருமானைப் பழிப்பார்கள். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஒருமுறை சிவபெருமானை இகழ்ந்து பேசினான். அதனால் கோபம் கொண்ட சிவன், தன்னைப் பழித்த பிரமனின் விண்ணை நோக்கிய தலையைக் கொய்து, அவனுக்கு ஒழுக்கத்தைப் புரிய வைத்தான்.

சிவபெருமானை மனத்தில் இருத்துவோம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. – (திருமந்திரம் – 365)

விளக்கம்:
பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவரும் தேவர்களும் திகைத்துப் போனார்கள். அவர்களது அச்சம் நீக்கிய நம் சிவபெருமான், அந்த பிரளயத்தின் நடுவே அக்னிப் பிழம்பாக நின்று அனைவரையும் காத்து அருளினான். வானுலகையும், மண்ணுலகையும் படைத்தவன் சுயம்புவான நம் சிவபெருமான். இதை உணர்ந்தவர்கள் நம் பெருமானை, தம்முடைய மனத்தில் இருத்தி வழிபடுகிறார்கள். நாமும் அதை உணர்ந்து சிவபெருமானை நம் மனத்தில் இருத்தி வணங்குவோம்.

எண்கடல் சூழ் எம்பிரானே!

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 364)

விளக்கம்:
பிரளயத்தின் போது சூழ்ந்த வெள்ளத்தை வற்றச் செய்தான் சிவபெருமான். இதைக் கண்ட தேவர்கள் எல்லாம் “கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் உன்னைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து கொள்ளட்டும்” என்று இறைஞ்சினார்கள். வெள்ளமெல்லாம் வற்றிய பிறகு, கடல் போன்ற விண்ணுலகை அமைத்துக் கொடுத்த அந்தக் கடவுளை, கண் கசிந்து நினைக்க மறந்து விட்டார்களே அந்தத் தேவர்கள்!

அஞ்ச வேண்டாம்! சிவபெருமான் அருள் உண்டு!

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே. – (திருமந்திரம் – 363)

விளக்கம்:
பிரளய வெள்ளத்தின் போது, அந்த அலை கடலை ஊடறுத்து நெருப்பு மலையாக நின்றான், இந்த உலகத்துக்கும் வானவர்க்கும் தலைவனான சிவபெருமான். உலக மக்கள் அந்த நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு “யாரும் அஞ்சாதீர்கள்!” என்று கூறி அருள் செய்தான்.

நெருப்பு மலையாக நின்ற சிவபெருமான்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே. – (திருமந்திரம் – 362)

விளக்கம்:
பிரளயத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது கரிய நிறம் கொண்ட பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. அந்நேரத்திலும் பிரமனும் திருமாலும் ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். நம் இறைவனான சிவபெருமான் ஒளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சிவபெருமானின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் சிவனே தலைவன் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தான்.

error: Content is protected !!