தீபம் போன்ற அழகான சிந்தை!

தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே – 823

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்பவர்கள் ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தம்முள்ளே கண்டு, இந்த உலகம் இயங்கும் முறையைப் பற்றிய தூரதரிசனம் பெறுவார்கள். தூரதரிசனம் பெற்ற அவர்கள் கருமை நிறக் கண்களை உடைய பராசக்தியின் அருள் பெற்று ஞானத்தின் எல்லையை அறிவார்கள். எழுச்சி கொண்டு ஒளி விடும் தீபம் போன்ற அழகான சிந்தையைக் கொண்டவர்களுக்கு, பரந்த இவ்வுலகம் வெளிச்சம் நிறைந்ததாகத் தெரியும்.

கேசரியோகத்தினால் சிந்தை தெளிவு பெறும்.

காராரும் – கருமை நிறம் பொருந்திய, கடைஞானம் – ஞானத்தின் எல்லை, ஏராரும் – எழுச்சி நிறைந்த, பாராரும் – பரந்த, பகன் – சூரியன்

Leave a Reply

error: Content is protected !!