கேள்விப்படாத பூ ஒன்று உண்டு!

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே – 844

விளக்கம்:
பரியங்கயோகத்தினால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், நம் தலை உச்சியின் சகசிரதளத்தில் சிவ சக்தி சேர்க்கையினால் அங்கே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை ஒன்று மலர்வதை நாம் உணரலாம். நாம் இதுவரை கேள்விப்படாத அந்த தாமரை மலர நிலமும் தேவையில்லை, நீரும் தேவையில்லை. அத்தாமரைக்கு அரும்புமில்லை, வேருமில்லை. சூரிய ஒளியோ சந்திர ஒளியோ இல்லாமலேயே ஒளி வீசும் தன்னொளி கொண்டது, நமது தலை உச்சியில் உள்ள சகசிரதள தாமரை. அந்தத் தன்னொளிக்கு கீழ் திசை என்பதோ மேல் திசை என்பதோ கிடையாது, முழுமையான ஒளி அது.

பங்கயம் – தாமரை, தார் – அரும்பு, ஊர் – சூரிய ஒளி

Leave a Reply

error: Content is protected !!