வேள்வித்தீ வினைகளைப் பொசுக்கும்

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.  – (திருமந்திரம் – 219)

விளக்கம்:
ஆழ்ந்த அகலில் நின்று எரியும் திரி, விளக்கில் உள்ள எண்ணெய் எல்லாவற்றையும் காலி செய்கிறது. அது போல நாம் செய்யும் வேள்விகளின் தீ நமது ஊழ்வினைகளை அகற்றும். நமது வினைகளால் ஏற்பட்ட நோய்களும், துன்பங்களும் தீரும். இறைவனைப் போற்றி நாம் செய்யும் வேள்விகள் வினைகளைச் சுட்டுப் பொசுக்கும்.

புருவ மத்தியின் சுடர்

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.  – (திருமந்திரம் – 218)

விளக்கம்:
நெய் நின்று எரியும் வேள்வித்தீயை வளர்ப்பதுடன், புருவ மத்தியில் விளங்கும் சுடரின் இயல்பையும் அறிந்து கொள்வோம். புருவ மத்தியின் சுடரை நாம் உணரும் நாள், நம்முடைய பாவங்கள் எல்லாம் நீங்கும் நல்ல நாளாகும். தொடர்ந்து புருவ மத்தியின் சுடரை நின்று எரியச் செய்வதே இன்பம் தரும் சிறந்த வேள்வியாகும்.

தீயதுவாமே – தீ (வேள்வி) + அதுவாமே

ஆகமங்களை விரும்பிக் கற்போம்

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 217)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இரு வேறு மலர்களின் வண்டுகளைப் போன்றவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் வேறு வேறாகவே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். வேதங்களையும் சிவாகமத்தையும் புரிந்து கொண்டுக் கற்கிறார்கள். இதனால் அவர்களிடம் குண்டலினி சக்தியும் ஞான சக்தியும் மேம்பட்டு விளங்குகிறது.

தூய்மையான நெறி

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.  – (திருமந்திரம் – 216)

விளக்கம்:
நமக்கெல்லாம் நெருங்கிய துணையாக இருப்பது, அந்தணர்கள் வளர்க்கும் அக்னிக்குள் அக்னியாக இருக்கும் இறைவனே. அந்தணர்கள் இல்லறத்தில் இருந்தாலும், அக்னிக்குள் உட்பொருளாய் விளங்கும் அந்த இறைபொருளைப் புரிந்து கொள்வார்கள். தமது மனைவியுடன் சேர்ந்து அக்னிக் காரியங்களை மெய்ப்பொருள் உணர்ந்து செய்வார்கள். இது தூய்மையான வாழ்க்கை நெறியாகும்.

நம் விதியை நாமே முடிவு செய்யலாம்

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 215)

விளக்கம்:
அரிய வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தவறாமல் யாகங்களைச் செய்வார்கள். மோட்சத்தை அடையும் பொருட்டு, தாங்கள் உண்ணும் முன் பிறர்க்கு தானம் செய்வார்கள். தம் விதியை தானே முடிவு செய்யும் திறன் வேண்டி மெய்நெறியை நாடுவார்கள். அந்த உண்மை நெறியிலே தங்கள் அறிவாலே அந்தத் திறனைப் பெறுவார்கள்.

வேள்வியின் பயன்கள்

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.  – (திருமந்திரம் – 214)

விளக்கம்:
வெற்றி தரும் வேதத்தை தன்னுடைய முதல் பொருளாகக் கொண்டுள்ள அந்தணர்கள் தொடர்ந்து செய்யும் அக்னி வேள்வியினாலே வானம் தவறாமல் மழை பொழிகிறது. இந்த நிலம் நல்ல விளைச்சலைத் தருகிறது. எட்டுத்திசையில் உள்ள மக்களும், எட்டுத்திசைகளைக் காக்கும் திக்குப்பாலகர்களும் நன்மை பெறுகிறார்கள்.

ருசிக்காக இல்லாமல் பசிக்காகச் சாப்பிடுவோம்

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.  – (திருமந்திரம் – 213)

விளக்கம்:
உணவில் அறுசுவையையும் விரும்பி வேண்டுபவர்கள், பசுக்கள் முதலான விலங்கினத்தைப் போன்றவர்கள். ஏற்கனவே நம்முடைய ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு எண்ணில்லாத துன்பங்களைத் தந்துள்ளன. வாழ்வில் நம்மை வருத்தும் வினைகள் ஒன்றிரண்டு அல்ல, அவை ஏராளம். நாம் அறுசுவை போன்ற விஷயங்களை வெறுத்து ஈசனை வேண்டி நின்றால் நம்முடைய வறுமை நீங்கப் பெறலாம்.

உறவுகள் வினையை விடக் கொடியது

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.  – (திருமந்திரம் – 212)

விளக்கம்:
பெருகி வரும் உறவுகள் நம்முடைய வினையை விட கொடிய விஷயமாகும். அவர்களால் நமது வினை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப்பிறவியில் நமது வாழ்நாள் முடிவதற்கு முன்பே ஒருநாள் நம்முடைய மெய்யுணர்வு என்னும் விளக்கை ஏற்றி, தொடர்ந்து அந்த விளக்கை அணையாமல் காக்க வேண்டும். மெய்யுணர்வு பெற்றால் உண்மைப் பொருளை அறியலாம், திரும்பத் திரும்ப நாம் சென்று விழும் அந்தப் பிறவிக்குழியையும் மூடலாம்.

வயிற்றை நிரப்பியே வைத்திருக்க முடியாது

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.  – (திருமந்திரம் – 211)

விளக்கம்:
கற்குழியாகிய வயிற்றை நிரப்ப பொன்னும் பொருளும் தேடி சேர்த்து வைப்பார். ஆனால் வயிறு எப்போதும் நிரம்பி இருக்கும்படி செய்வது முடியாத செயல் என்பதை நாம் உணர்வதேயில்லை. இதை உணர்ந்து தேவையான நேரத்தை பொருள் தேடுவதிலும், மற்ற நேரத்தை சிவனின் திருவடியை நாடுவதிலும் கழித்தால் குற்றம் இல்லாதவராய் ஆவோம்.

கற்குழி – நிரப்ப முடியாத வயிறு,   கனகம் – பொன்

வறுமையிலும் இறைவனைத் துதிப்போம்

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. – (திருமந்திரம் – 210)

விளக்கம்:
தினமும் நாம் பொய்க்குழியாகிய வயிற்றை நிரப்ப வேண்டியவராய் உள்ளோம். பொழுது விடியவும் உணவுத் தேவைக்காக வேலை செய்து உழைக்க கிளம்புகிறோம். வயிற்றுத் தேவைக்காக நாம் அலைந்து திரிந்தாலும் மறக்காமல் ஈசனை துதிப்போம். ஈசனை துதித்தால் வினை தீரும், வினை தீர்ந்தால் வறுமை அகலும்.

குற்றமில்லாத வாழ்வு நடத்தி இறைவனை வணங்கி வந்தால் வயிற்றுப்பாடு தானே தீரும்.

புலரி – சூரியன்,  தூர் – நிரப்பு,  ஏத்துமின் – வணங்குங்கள்.

error: Content is protected !!