கேள்விப்படாத பூ ஒன்று உண்டு!

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே – 844

விளக்கம்:
பரியங்கயோகத்தினால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், நம் தலை உச்சியின் சகசிரதளத்தில் சிவ சக்தி சேர்க்கையினால் அங்கே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை ஒன்று மலர்வதை நாம் உணரலாம். நாம் இதுவரை கேள்விப்படாத அந்த தாமரை மலர நிலமும் தேவையில்லை, நீரும் தேவையில்லை. அத்தாமரைக்கு அரும்புமில்லை, வேருமில்லை. சூரிய ஒளியோ சந்திர ஒளியோ இல்லாமலேயே ஒளி வீசும் தன்னொளி கொண்டது, நமது தலை உச்சியில் உள்ள சகசிரதள தாமரை. அந்தத் தன்னொளிக்கு கீழ் திசை என்பதோ மேல் திசை என்பதோ கிடையாது, முழுமையான ஒளி அது.

பங்கயம் – தாமரை, தார் – அரும்பு, ஊர் – சூரிய ஒளி

இதம் தரும் பராசக்தி

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே – 843

விளக்கம்:
ஒரு சுழலின் உள்ளே அகப்பட்டாற் போல, யோக நிலையின் கும்பகத்தில் நின்று தன்னைத் தானே ஆகுதி செய்யும் யோகிகளுக்கு முதுமை என்பதே கிடையாது. கறுத்த தலைமயிருடன் எப்போதும் இளமையாக இருப்பார்கள். நம்முள்ளே குடியிருக்கும் பராசக்தி என்றும் நமக்கு துணை இருந்து இதம் தருவாள். நம்முடைய யோகநிலையின் பக்குவம் அறிந்து, நம்மை இந்த உலக பந்தத்தில் இருந்து விடுவிப்பாள்.

உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு), ஒரு சுழி – சுழல் போன்ற ஒரு ஆன்மிக நிலை, கதம் – ஓட்டம், பதம் – பக்குவம்

தன்னைத் தானே ஆகுதி செய்தல்

வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே – 842

விளக்கம்:
பிராணாயாமப் பயிற்சியில் பூரகம், ரேசகம் ஆகியவற்றிற்கு இடையே நன்றாக இழுத்த மூச்சை கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்தவர் இங்கு மிகவும் குறைவு. மூச்சை நன்கு உள்ளே இழுத்து கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்து, அதனைப் பயிற்சி செய்பவர் உயர்ந்த நிலையை அடைந்து, தன்னைத் தானே சிவபெருமானுக்கு ஆகுதி செய்கிறார்.

வாங்கல் – பூரகம் என்னும் மூச்சை உள்ளிழுத்தல், இறுதல் – ரேசகம் என்னும் மூச்சை வெளியே விடுதல், வீங்க வலிக்கும் – மூச்சை நன்றாக இழுத்து கும்பகத்தில் நிறுத்துதல், விரகு – உபாயம், உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு)

மின்னிடையாள்!

மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே – 840

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, மேலாந்தலமான துவாதசாந்தம் என்னும் வெளியை அறிவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு முன்பு இந்நிலையை அறிந்தவர் யாரெல்லாம் என்று பார்த்தால் – திருமால், பிரமன், நந்திதேவர் ஆகியோர் ஆவர். இதிலிருந்தே நாம் பரியங்கயோகத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். யோகத்தின் உயர்நிலையான துரியநிலையின் நடு நாயகரான சிவபெருமான் நம்முடைய பரியங்கயோக சிரத்தையை உணர்வார், தம்முடன் சேரும் மின்னிடையாளான பராசக்தியிடம் நம்முடைய யோகப்பயிற்சியின் மேன்மையை எடுத்துச் சொல்வார். இதனால் நமக்கு சிவபெருமான் அருளுடன், பராசக்தியின் அருளும் கிடைக்கும்.

மேலாந்தலம் – சிரசின் உச்சியில் விளங்கும் துவாதசாந்தம், மால் – திருமால், திசைமுகன் – பிரமன், நாலாம் நிலம் – துரியம், மின்னிடையாள் – பராசக்தி

நாள் தவறாமல் யோகம் செய்வோம்

மனைபுகு வீரும் அகத்திடை நாடி
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே – 744

விளக்கம்:
நம் மனம் புற உலகில் அலைவதை நிறுத்தி, அகத்தை நாடி, மனத்தை உள்ளே செலுத்தி யோகப்பயிற்சி செய்வோம். வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களும், மாதத்தின் 30 நாட்களும், அதாவது நாள் தவறாமல் யோகப்பயிற்சி செய்து வந்தால், தன்னை அறியலாம். தன்னை அறிவதால் ஆறு ஆதாரங்களிலும் யோகநிலையில் பொருந்தி இருந்து சிவம், சக்தி, நாதம், விந்து ஆகியவற்றைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

இருபத்தஞ்சு – இரு + பத்தஞ்சு (முப்பது நாட்கள் – 1 மாதம்), ஈராறு – ஈர் + ஆறு (பன்னிரெண்டு மாதங்கள்), ஏற அட்டுதல் – கூடச் சேர்த்தல், தற்குறி ஆறு – ஆறு ஆதாரங்கள்

பயிற்சி தொடங்க ஆகாத நாட்கள்

திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – 743

விளக்கம்:
யோகப்பயிற்சி தொடங்க கீழ்கண்ட நாட்களைத் தவிர்த்தல் நலம்.

பிறந்த நட்சத்திரம் வரும் நாள் மற்றும் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் எட்டாவது நட்சத்திரம் வரும் நாட்கள். மற்ற நாட்களில் இருந்து சிறந்த ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து யோகப்பயிற்சியைத் தொடங்கலாம்.

வயது என்பதே இல்லாமல் இருக்கலாம்

அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண்டு என்பது
எழுகின்ற ஈரைம்பது எண்அற்று இருந்தே – 742

விளக்கம்:
நம்முடைய வாழ்நாளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இருபத்து எட்டு வயது வரைக்கும் முதல் பகுதி, முப்பத்து மூன்று வயது வரைக்கும் இரண்டாம் பகுதி, அறுபத்து இரண்டு வயது வரைக்கும் மூன்றாம் பகுதி, நூறு வயது வரைக்கும் நான்காம் பகுதியாகும். யோகத்தில் நின்று சகசிரதளத்தில் சிவபெருமானைக் கண்டவர்கள், மேற்கண்ட நான்கு பகுதிகள் எதிலும் அடங்க மாட்டார்கள். அவர்கள் காலச்சக்கரத்துக்கு அப்பாற்பட்டவர்கள், அவர்கள் தங்களுக்கு வயது ஆவதையே உணர மாட்டார்கள்.

ஐயைஞ்சு மூன்று – இருபத்து எட்டு
ஈரைம்பது – நூறு

காலம் கழிந்து கொண்டே இருக்கிறது

உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறு ஏழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியாது அழிகின்ற வாறே – 741

விளக்கம்:
உற்றறிவு ஐந்து – சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை ஆகியவற்றால் அறியும் அறிவு
ஆறாவது அறிவு – மனம், அறிவு ஆகியவற்றால் எதையும் பாகுபடுத்தி அறியும் அறிவு
ஏழாவது அறிவு – பாகுபடுத்துவதால் வரும் முடிவைச் சார்ந்து இருத்தல்
எட்டாவது அறிவு – நூல்களைக் கற்று அறியும் அறிவு
ஒன்பதாவது அறிவு – நூல்களில் கற்றவற்றை அனுபவமாக அறியும் அறிவு
பத்தாவது அறிவு – அனுபவமாக உணர்ந்தவற்றைக் பற்றிக் கடைபிடிக்கும் அறிவு

இந்த அறிவுநிலைகளால் பல உலக விஷயங்களில் ஈடுபட்டு, நம்முடைய கால அளவு கழிந்து வீணாவதை உணராமல் இருக்கிறோம்.

காலத்தைக் கடந்து நிற்கலாம்

மதிவட்டம் ஆக வரைஐந்து நாடி
இதுவிட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே – 740

விளக்கம்:
மதிவட்டம் எனப்படும் சகசிரதளத்தில் வியாபினி முதலான ஐந்து கலைகளை உணர்ந்து, பிறகு அதை விட்டு சிரசில் இருந்து பன்னிரெண்டு அங்குல அளவுக்கு மேல் வசிக்கும் சிவபெருமானை உணர்ந்து யோகம் செய்வோம். ஆராய்ந்து பார்த்தால், சகசிரதளத்துக்கு மேல் கவனம் செலுத்தி யோகம் செய்யும் போது, சிவபெருமானின் அருள் பெற்று, நாம் காலத்தைக் கடந்து நிற்பதை உணரலாம்.

மதிவட்டம் – சகசிரதளம்
வரை ஐந்து – வியாபினி, வியோமரூபை, அநந்தை, அநாசிருதி, உன்மனி
பதிவட்டம் – சிவன் இருக்கும் இடம்

விளையும் வேதசக்தி!

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே – 739

விளக்கம்:
ஆகுஞ்சனம் என்னும் ஆசனத்தில் அமர்ந்து யோகப்பயிற்சி செய்து, அதில் விளையும் வேதசக்தியை அன்போடு ஏற்றுக்கொள்வோம். விளைந்த நெல்லை விதைநெல்லாக பயன்படுத்தி பல இடங்களில் நெல் விளைவிப்பதைப் போல, யோகத்தினால் விளையும் யோகசக்தியைப் பயன்படுத்தி இன்னும் பல உள்ளார்ந்த யோகங்களைப் பயிற்சி கொள்ளலாம். இதனால் பழமையான மந்திரங்கள் வெளிப்படுவதை உள்ளே உணரலாம், அந்த மந்திரங்களில் லயித்து அமைதியாய் இருக்கலாம்.

ஆகுஞ்சனம் – பத்மாசனத்தில் அமர்ந்து மடியில் இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து, எருவாயை (குதம்) மேல் ஏற்றி நிற்றல்.
ஊழ் – பழமை

error: Content is protected !!