வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே – 850
விளக்கம்:
கிடைக்க அரிதான அமுரி என்னும் சிவநீரை வீர மருந்தென்றும், தேவ மருந்தென்றும், ஆதி பராசக்தி தந்த மருந்தென்றும் நந்தியம்பெருமான் உரைத்திருக்கிறார். சிவநீரை தமது சகசிரதளத்தில் உணர்ந்து அனுபவம் பெற்றவர்கள், அந்த அமுரியை ஆதிப்பொருளான சிவபெருமான் தமக்கு அளித்த ஆதி மருந்து என்பதை உணர்வார்கள். பெரிதும் அகன்ற இந்த உலகத்துக்கு அருள் செய்யும் அந்தப் பெருஞ்சோதி தரும் இந்த மருந்தின் பெருமை பற்றிச் சொல்ல மொழியின் வார்த்தைகள் காணாது.
-
வீர மருந்து: மனதிடம் கொண்ட யோகியர் (வீரர்கள்) கையாளுவதால்.
-
விண்ணோர் மருந்து: தேவர்கள் உண்ணும் அமிர்தத்திற்கு இணையானது என்பதால்.
-
நாரி மருந்து: ‘நாரி’ என்பது இங்கே சக்தியைக் குறிக்கும் (குண்டலினி சக்தி அல்லது உண்ணாக்கு வழியாகச் சுரக்கும் சக்தி நீர்).
-
ஆதி மருந்து: ஆதிப்பொருளான சிவபெருமான் நமக்கு அருளும் மருந்து