திருக்கொறுக்கை

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. – (திருமந்திரம் – 346)

விளக்கம்:
தியானத்தினால் நமது மனத்தை காமத்தின் வழியில் செல்லாது  திருத்தி, சிவனை நினைத்து அவனது நினைவிலேயே இருக்கச் செய்வோம். சிவபெருமான் மன்மதன்  விளைவிக்கும் காமத்தை அழித்து, நம்மை தவயோகத்தில் நிலையாக இருக்கச் செய்யும் இடம் திருக்கொறுக்கை.

சிவபெருமானை வேண்டினால், தியானத்தில் நமக்கு இடையூறாக வரும் மன்மதனை எரித்து அழிப்பான்.

திருக்கடவூர்

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. – (திருமந்திரம் – 345)

விளக்கம்:
மூலாதாரத்தில் மூளும் குண்டலினியை, தியானத்தினால் சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரதளத்தில் பொருந்தி இருக்கச் செய்வது அங்கி யோகமாகும். இந்த யோகத்தைப் பயில்வதால் காலனை எட்டி உதைக்கலாம். நம்முடைய உடல் என்னும் இந்த ஊர் நலமாக இருக்கும்.

சிவபெருமான் காலனைக் காலால் எட்டி உதைத்த வீரச்செயல் நடந்த இடம் திருக்கடவூர். நம்முடைய இந்த உடலையும் கடவூர் என்று சொல்லலாம்.

கடம் – உடல்

error: Content is protected !!