நம்முள்ளே ஒரு விளக்கேற்றுவோம்

பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே – 820

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்து, நம் தொண்டைப் பகுதியில் உள்ள அண்ணாக்கில் மனத்தை ஒன்றச் செய்வோம். படிக்கதவாகிய அண்ணாக்கில் மனம் ஒன்றினால், உள்ளே ஒளி பாய்ச்சியது போல நம் உடல் புத்துணர்ச்சி பெறும். நம் மூச்சுக்காற்று நாம் சொன்னபடி இயங்கி, நம் கைவசப்படும். மூச்சுக்காற்று நம் வசப்பட்டு, குண்டலினி சக்தியை மேலே ஏற்றினால், இருளாக இருக்கும் நம் உடல் என்னும் கோயில், மணி விளக்கு ஏற்றியது போல் வெளிச்சம் பெறும்.

கேசரியோகத்தினால் உடல் என்னும் கோயிலில் விளக்கேற்றலாம்.

பை – உடல், படிக்கதவு – அண்ணாக்கு, கையினுள் – கைவசப்படுதல், மையணி கோயில் – இருளாய் இருக்கும் கோயில்

Leave a Reply

error: Content is protected !!